முதல்வரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது: விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம்!
சென்னை:
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக தலைவரைக் கேலி செய்யும் வகையில் முதலமைச்சரின் உடல்மொழி அமைந்திருந்தது மனித மாண்புகளுக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் தரப்பில் ‘அது உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுபோன்ற உடல்மொழி கண்ணியமான அணுகுமுறை அல்ல. அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்துவது முற்றிலும் நாகரிகமற்ற செயலாகும். அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்த பண்பு என்பதால், பொறுப்பிலுள்ள முதல்வர் இனிவரும் காலங்களில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முதல்வரின் உரை தொடர்பான விவாதத்தின் போது குறுக்கிட்ட சட்டத்துறை அமைச்சர், மிசா கால ஒடுக்குமுறை மற்றும் திமுக தலைவர் குறித்துப் பேசியது வரலாற்றுப் பிழையாகும் என்று குறிப்பிட்டுள்ள திருமாவளவன், மாண்புமிகு அமைச்சர் தனது தவறான பதிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


