காவலர் தினம்: பெசன்ட் நகர் கடற்கரையை நேரில் தூய்மைப்படுத்திய சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்!

சென்னை: காவலர் தினத்தினை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ் இ.கா.ப அவர்கள் இதில் நேரில் கலந்துகொண்டு, தூய்மைப் பணியினை துவக்கி வைத்ததுடன் கடற்கரையில் கிடந்த குப்பைகளை நேரடியாக அகற்றி தூய்மைப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் காவல்துறை இசைக்குழு (Police Band) மற்றும் பேக்-பைப்பர் (Bagpiper) இசைக்குழுவின் சிறப்பு இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் காவல் கூடுதல் ஆணையாளர்கள் A.G.பாபு (தலைமையிடம்), K.S.நரேந்திரன் நாயர் (தெற்கு) மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஊர்க்காவல் படை வீரர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள், NCC மற்றும் NSS மாணவ-மாணவிகள் என சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கடற்கரையை அசுத்தப்படுத்தாமல் சுத்தமாகப் பாதுகாக்கும் பொறுப்பு பொதுமக்கள் அனைவருக்கும் உள்ளது என்று குறிப்பிட்ட காவல் ஆணையாளர், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை ஆங்காங்கே வீசாமல், அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்தார்.

