சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு: பாதுகாப்பு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை!

சென்னை, செப். 12:
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், IPS இன்று பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து முக்கிய ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு. அமல்ராஜ், IPS மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தினசரி காவல் பணிகள், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றத்தடுப்பு முன்முயற்சிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, நவீன உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காவல் பணிகளை செம்மைப்படுத்துவது மற்றும் சென்னை பெருநகர காவல்துறை முன்னெடுத்து வரும் சிறப்பு நலத்திட்டங்கள் குறித்தும் உயர் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

