புதுச்சேரியில் 2027 அரசு வேலை வாய்ப்புக்கு முன்னோட்டம்: காலிப் பணியிடங்கள் தரவு சேகரிப்பு தொடக்கம்
புதுச்சேரி அரசுத் துறைகளில் 2027ஆம் ஆண்டுக்குள் நடைபெறும் ஓய்வுபெறல்கள் மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்பு நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகத் தொடர்புடைய துறைகள் வழியாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முதல் கட்டமாக, அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் மற்றும் ஓய்வு பெற உள்ள பணியிடங்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
அரசு உத்தரவின்படி, ஒவ்வொரு துறையும் தமது ஊழியர்களில் ஏற்கெனவே காலியாக உள்ள பதவிகள், 2027 முடிய ஓய்வு பெற உள்ள பதவிகள், நிரந்தரமாக நிரப்ப வேண்டிய முக்கிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரங்களைச் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தொகுத்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் புதிய அரசு வேலை அறிவிப்புகள் வெளியிடப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலிப் பணியிடங்கள் மற்றும் ஓய்வு பெறும் பதவிகள் அனைத்தும் ஒருங்கிணைத்துக் கணக்கெடுக்கப்படுவதால், வருங்காலத்தில் வெளிப்படையான, திட்டமிட்ட ஆட்சேர்ப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது என வேலைவாய்ப்பு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

