முதல்வர் லண்டன் பயணம்: முதலீடுகள் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
சென்னை: தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் மற்றும் அதில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் சட்டமன்றக் குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “நம்முடைய முதலமைச்சர் தற்போது லண்டன் சென்றுள்ளார். அவர் சொந்த வேலைக்காகச் சென்றுள்ளதாகச் சொல்கிறார்கள்; அவருடன் யாரெல்லாமோ சென்றிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அரசு செலவில் யாரையெல்லாம் கூட்டிக்கொண்டுச் சென்றார் என்பது தெரியவில்லை. அவர் சொந்த வேலைக்காகச் சென்றதாகச் சொன்னால் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஒருவேளை முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அரசுப் பயணமாக அவர் சென்றார் என்றால், அங்கு யாரையெல்லாம் சந்தித்துப் பேசினார்? தமிழகத்திற்கு எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது? போன்ற விவரங்களை அவர் தமிழகம் திரும்பியதும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


