கேரளாவிற்கு கனிம வளம் கடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை: களியக்காவிளை சோதனை சாவடிகளில் டிஐஜி திருநாவுக்கரசு திடீர் ஆய்வு!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, களியக்காவிளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதி சோதனை சாவடிகளில் காவல்துறை துணைத் தலைவர் (DIG) முனைவர் திருநாவுக்கரசு நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சோதனை சாவடிகளில் வாகனத் தணிக்கை நடைமுறைகள் மற்றும் பதிவேடுகளை அவர் தீவிரமாகப் பார்வையிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு கேரளா செல்லும் வாகனங்கள் சோதனை சாவடிகளைக் கடந்து சென்றது தெரியவந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
குறிப்பாக, அவ்வாறு சட்டவிரோதக் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது மட்டுமின்றி, பணியில் அலட்சியமாக இருந்து கடத்தலுக்குத் துணைபோகும் சோதனை சாவடி காவலர்கள் மீதும் பாரபட்சமின்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டு துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி திருநாவுக்கரசு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

