நேபாள துயரம்: பூரி கடற்கரையில் உருக்கமான மணல் சிற்பம் மூலம் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி!

புவனேஸ்வர்: இக்கட்டான சூழலில் தவித்து வரும் நேபாள நாட்டு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருக்கமான மணல் சிற்பத்தை வடித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள துயரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ‘Prayers for Nepal’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் நேபாள நாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையிலான குறியீடுகளுடன் மிகவும் நேர்த்தியாக இந்த கலைப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது பதிவில், இந்த இக்கட்டான பேரிடர் நேரத்தில் நாங்கள் நேபாள நாட்டு மக்களுடன் உறுதியாக துணை நிற்கிறோம் என்றும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பூரி கடற்கரையில் வடிக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பத்தை அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பார்வையிட்டு நேபாள மக்களுக்காகப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.



