காரைக்கால்

காரைக்காலில் ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் குழாய் பழுதால் பெண் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க முதல்வரிடம் எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் மனு!

காரைக்காலில் இருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டபோது ஆக்சிஜன் குழாய் பழுதாகி பெண் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்கக் கோரி நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட திருவட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் தீவிர உடல்நலக்குறைவு காரணமாக காரைக்கால் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது வழியில் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் காரைக்கால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விக்னேஸ்வரன், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் உடனடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரி முதல்வரிடம் விரிவான மனுவை அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன