தேசியம்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் மேம்பாட்டுத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திருத்த மசோதா-2026, மக்களவையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பு ஆகஸ்ட் 3ஆம் தேதி மாநிலங்களவையும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியுள்ளது.

2006ஆம் ஆண்டு அமலுக்கு வந்த MSME மேம்பாட்டுச் சட்டம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் நடைமுறைகள் மற்றும் மாறிவரும் சட்டச் சூழலுக்கு ஏற்ப திருத்தப்படுகிறது. தொழில் நிறுவனங்களுக்குத் தாமதமாகக் கிடைக்கும் தொகை, பணப்புழக்கச் சிக்கல், வணிகத் தகராறுகளை விரைவில் தீர்ப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உதயம் பதிவுத் தளம் நிரந்தரமான, இலவச மற்றும் விருப்ப அடிப்படையிலான டிஜிட்டல் பதிவுத் தளமாக மாற்றப்படுகிறது. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகை விவகாரங்களை விரைவாகத் தீர்க்கக் காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், MSME நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் அல்லது சேவைகள் பெறும்போது, TReDS தளத்தின் வழியே பணம் செலுத்தும் நடைமுறை வலுப்படுத்தப்படுகிறது.

தீர்ப்பு தொடர்பான வழக்கு 6 மாதங்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால், தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட தொகையில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை MSME நிறுவனத்திற்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியும்.

உதயம் தளத்தில் பதிவு செய்த MSME நிறுவனங்களின் எண்ணிக்கை, 2023 ஏப்ரல் 1இல் இருந்த 1.65 கோடியிலிருந்து தற்போது 9.16 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டில் 40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் MSME துறை, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன