உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம்
ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கான ஆட்சேர்ப்பு முன் தேர்வு முகாம், புதுச்சேரி உப்பளத்தில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டுக் கூட மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.
புதுச்சேரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் முகாமில் பங்கேற்றனர். நீள ஓட்டம், உயரம் மற்றும் உடல் அளவு பரிசோதனை, புல்-அப், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட உடல் திறன் சோதனைகள் ராணுவ அதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெற்றன.
முதற்கட்டமாக 1.6 கிலோமீட்டர் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. பத்து நிமிடத்திற்குள் ஓட்டத்தை முடித்து, உயரம், எடை மற்றும் மார்பு அளவு ஆகிய உடல் அமைப்புத் தகுதிகளைப் பூர்த்தி செய்தவர்களே அடுத்த கட்டத் தேர்வுக்கான பட்டியலில் இடம் பெற்றனர். உடல்நலம் மற்றும் கண்பார்வை பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆட்சேர்ப்புக் குழுவின் தகவலின்படி, தினமும் சுமார் 120 இளைஞர்கள் முன் தேர்வுக்காகப் பதிவு செய்து வருகின்றனர்.
உடல் திறன் சோதனைகளில் தேர்ச்சி பெறும் இளைஞர்கள், அடுத்த கட்டமாக ராணுவ மருத்துவப் பரிசோதனை மற்றும் எழுத்துத் தேர்வுக்குத் தகுதி பெறுவர். இன்று மட்டும் 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடல் திறன் தேர்வை முடித்து அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

