மாநில அந்தஸ்து கிடைத்தால் முதல்வர் பதவியை துறக்கத் தயார்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி ஆவேசப் பேச்சு!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து கிடைத்து மக்கள் நலன் பெறுவார்கள் என்றால், எனது முதலமைச்சர் பதவியை உடனடியாகத் துறக்கவும் தயார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ந. ரங்கசாமி ஆவேசமாகவும் உருக்கமாகவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது அவையில் பேசிய முதலமைச்சர் ந. ரங்கசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு, இங்குள்ள மக்களுக்கு அனைத்து உரிமைகளும் முழு நன்மைகளும் சேரும் என்றால், எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். மாநில அந்தஸ்துக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார்” என்று திட்டவட்டமாகப் பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு போதுமான தன்னாட்சி அதிகாரங்கள் இருப்பது மிகவும் அவசியமானது என்றும், முழுமையான அதிகாரம் இருந்தால் மட்டுமே மாநிலம் அனைத்து துறைகளிலும் தடையின்றி வளர்ச்சி காண முடியும் என்றும் சட்டப்பேரவையில் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
