புதுவை தமிழ்ச்சங்க தலைவராக முத்து மீண்டும் அமோக வெற்றி: 11 புதிய நிர்வாகிகள் தேர்வு!
புதுச்சேரி, செப். 7:
புதுவை தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் தலைவராக முத்து மீண்டும் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
புதுவை தமிழ்ச்சங்கத்தில் மொத்தம் 1,189 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இச்சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். முந்தைய நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 11 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தமிழ்ச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், தேர்தல் ஆணையர் பிரபாகரன் தலைமையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பதிவான மொத்த 795 வாக்குகளில், 738 வாக்குகள் செல்லுபடியாகும் வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முத்து 681 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்று மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் துணைத்தலைவர்களாக திருநாவுக்கரசு மற்றும் கோதண்டபாணி, செயலாளராக சீனு மோகன்தாசு, துணைச் செயலாளராக சுரேஷ் குமார், பொருளாளராக பால சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வாகினர். ஆட்சிக்குழு உறுப்பினர்களாக அருள்ராசு, இராசா, செயந்தி ராஜவேலு, சிவேந்திரன், ஆனந்தராசன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 11 நிர்வாகிகளுக்கும் தேர்தல் ஆணையர் பிரபாகரன் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.