புதுச்சேரியில் கொட்டித் தீர்த்த கனமழை: அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம்!
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையின் காரணமாக நகரின் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுச்சேரி நகர்ப் பகுதி மட்டுமின்றி அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. நீண்ட நேரமாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி வழியே சென்ற வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
திடீர் கனமழை காரணமாக நகரின் சில இடங்களில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் நீரை விரைவாக வெளியேற்ற நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

