பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை: புதுச்சேரியில் ‘சேவை உறுதிமொழி இயக்கம்’ ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் “சேவை உறுதிமொழி இயக்கம்” முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியகுமார் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர், சேவை உறுதிமொழி இயக்கத்தின் செயல்பாடுகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நலப்பணிகள் மற்றும் களப்பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் விரிவான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் வி.பி. இராமலிங்கம் மற்றும் கட்சியின் மாநில, தொகுதி நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டு இயக்கத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினர்.

