இங்கிலாந்து சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் லீ மேன்ஸ் கோப்பை: தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமையவுள்ளது!

சென்னை: வரலாற்றுச் சிறப்புமிக்க இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பந்தய மைதானத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘தி லீ மேன்ஸ் கப் – சில்வர்ஸ்டோன் ரவுண்ட்’ (The Le Mans Cup – Silverstone Round) கார் பந்தயத் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச மோட்டார் பந்தய உலகிற்கு வழிகாட்டும் வகையில் அமைந்த இந்த நிகழ்வை இந்திய அளவில் சிறப்பு பிரதிநிதிகள் தொடங்கி வைத்தது முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
பிரபல திரைப்பட நடிகரும் முன்னணி மோட்டார் பந்தய வீரருமான அஜித் குமாரின் சிறப்பு அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. மோட்டார் விளையாட்டுகள் மீதான அவரது பேரார்வம் மற்றும் தமிழ்நாட்டில் இந்த விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது. இந்நிகழ்வில் இந்தியாவின் முன்னணி பார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், சர்வதேச தொழில்துறை மற்றும் விளையாட்டுத் துறை வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்கி, உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கும் நோக்கில் விரைவில் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ (Motor Sports City) அமைக்கப்பட உள்ளது. இங்கிலாந்து பயணத்தின் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உயர்த்தும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


