நிரவி–திருப்பட்டினம் ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவில் சதுர்த்தி விழா: எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் பங்கேற்பு!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நிரவி–திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட படுதார்கொல்லை ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஸ்ரீ வெள்ளை விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. இதில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், மூலவரை மனமுருகி தரிசித்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர் பெருமானை வழிபட்டனர். விநாயகர் பெருமானின் திருவருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் பக்தர்களுடன் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
