புதுச்சேரியில் கடல்பாசி வளர்ப்பு மாநாடு மற்றும் மீன்வள திட்டங்கள்: மத்திய அமைச்சர்கள், முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு!

புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடங்கி வைத்தல் மற்றும் நீலப் பொருளாதாரத்திற்கான கூட்டுறவு சார்ந்த கடல்பாசி வளர்ப்பு குறித்த பன்முகத்திறன் மேம்பாட்டு மாநாடு கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவினை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ந. ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் நீலப் பொருளாதாரம், மீனவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் கடல்பாசி சாகுபடி மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


