புதுச்சேரியில் விடியல் பிரஸ் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரி: அ.இ.என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், தென்னிந்திய லித்தோ பிரஸ் உரிமையாளர்கள் சங்க தமிழ்நாடு-புதுச்சேரி மாநில பொருளாளருமான வி.ஜி.எஸ். விடியல் குரூப்ஸ் நிறுவனர் ஜி.சபரிநாதனின் பிறந்தநாளையொட்டி, வி.எம். கார்டனில் அமைந்துள்ள விடியல் பிரஸ் புதிய அலுவலகத்தை முதலமைச்சர் ந.ரங்கசாமி குத்துவிளக்கேற்றி முறைப்படி திறந்து வைத்தார்.
அச்சுத் துறையில் 35 ஆண்டுகளைக் கடந்து முத்திரை பதித்து வரும் விடியல் பிரஸ் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து, பிறந்தநாள் கண்ட ஜி.சபரிநாதனுக்கு முதல்வர் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் என 2,000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வி.ஜி.எஸ். விடியல் குரூப்ஸ் நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

