தமிழ்நாடு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை
சென்னையில் திடீரென பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தியாகராய நகர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை தீவிரமாகப் பெய்தது.
மாலை நேரத்தில் பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அலுவலகம் முடித்து வீடு திரும்பிய மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். சில இடங்களில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கனமழை தொடரும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.