நீட் தேர்வு அச்சத்தால் பல்லாவரம் மாணவர் தற்கொலை: உதயநிதி ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் மற்றும் கண்டனம்!
சென்னை: நீட் தேர்வு அச்சம் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவர் சாய் அபினவ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும் நீட் தேர்வுக்கு எதிரான கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவர் சாய் அபினவ் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், மீண்டும் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் இணைந்து நீட் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில், தேர்வு குறித்த அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக அவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வின் அச்சம் காரணமாக மாணவர் சாய் அபினவ் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டு நிற்கும் அவரது பெற்றோருக்கு என் ஆழ்ந்த ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை நாம் இழப்பது? குளறுபடிகளும் மோசடிகளும் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்காக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து, ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.