உப்பனாறில் கலக்கும் கழிவுநீர்: கடலில் மாசடைவதை தடுக்க நிரந்தர தீர்வு தேவை – எம்.எல்.ஏ நேரு வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக உப்பனாறில் கலந்து, பின்னர் கடலுக்குள் சென்று நீர்நிலைகளை கடுமையாக மாசடையச் செய்து வருவதாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு கவலை தெரிவித்துள்ளார்.
உப்பனாறு வழியாகச் செல்லும் கழிவுநீரால் நகர்ப்புறச் சூழல் பாதிக்கப்படுவது குறித்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நகரின் முக்கிய வடிகாலாக விளங்கும் உப்பனாறில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தொடர்ந்து பெருமளவில் திறந்துவிடப்படுகிறது. இதனால் உப்பனாற்றின் கரையோரப் பகுதிகளில் கடுமையான துர்நாற்றமும் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுவதுடன், இக்கழிவுநீர் கடலில் கலப்பதால் கடல் நீர்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தி, முழுமையான கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளை அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும், உப்பனாறு கழிவுநீர் கடலில் கலந்து மாசடைவதை உடனடியாகத் தடுக்க அறிவியல் பூர்வமான முறையான தீர்வினை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.