ஆரோவில் பார்வையாளர்களுக்காக ரூ.21 லட்சத்தில் 4 மின்சார வாகனங்கள்: எம்.பி. செல்வகணபதி துவக்கி வைத்தார்!

புதுச்சேரி: சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு வருகை தரும் பார்வையாளர்களின் போக்குவரத்து வசதிக்காக, நெய்வேலி என்.எல்.சி (NLC) நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் (CSR) நிதியுதவியின் கீழ் வாங்கப்பட்ட 4 புதிய மின்சார வாகனங்களின் சேவையை புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி) எஸ். செல்வகணபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆரோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த வாகனங்கள் ஒப்படைப்பு விழாவில், சுமார் ரூ.21 லட்சம் மதிப்பிலான 4 மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இந்நிகழ்ச்சியில், குஜராத் மாநில கூடுதல் தலைமை செயலாளரும், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆரோவில் பவுண்டேஷன் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி மற்றும் என்.எல்.சி நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன் ஆகியோர் முன்னிலை வகித்து கொடியசைத்து வாகன சேவையைத் தொடங்கி வைத்தனர்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த மின்சார வாகனங்கள், ஆரோவில் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் உள்ளூர் பயணத் தேவைகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
