காரைக்கால் விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நெல் சாகுபடி ஊக்கத்தொகை: முதல்வர் ரங்கசாமி வழங்கி உத்தரவு
காரைக்கால் மாவட்டத்தில் 2025-26 சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த 4,217 விவசாயிகளுக்கு ரூ.4.80 கோடி பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முதலமைச்சர் என். ரங்கசாமி, வேளாண்துறை அமைச்சர் ராஜசேகரன் முன்னிலையில் விவசாயிகளுக்கு இந்த நிதியுதவியை வழங்கினார்.
பொதுப் பாசனப் பகுதிகளில் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6,000, கடைமடைப் பகுதிகளில் சாகுபடி செய்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.7,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், நெல் விற்பனைக்கான ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் பாசனக் குழாய்களை அமைத்த விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்பட்டது. இதற்காக சில பயனாளிகளுக்கு ரூ.1.02 லட்சம் மற்றும் ரூ.3.22 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் மூலம் நெல் சாகுபடியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
