டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு: புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு!
புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே இனி பதவி உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சார்பில் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், மத்திய கல்வி வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றவும் டெட் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே அடுத்தகட்ட பதவி உயர்வுக்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் இந்த அதிரடி உத்தரவு புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியலை தயாரிக்கும் பணிகளில் அதிகாரிகள் இந்த விதிமுறையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.