சந்தை புதுக்குப்பத்தில் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ திட்டம்: மரக்கன்றுகளை நட்டு அமைச்சர் நமச்சிவாயம் தொடக்கம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘தாயின் பெயரில் ஒரு மரம் 3.0’ திட்டத்தின் கீழ், புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட சந்தை புதுக்குப்பத்தில் மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ.நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நட்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்து பசுமைப் பரப்பளவை விரிவுபடுத்தவும், தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இந்த உன்னத மரம் நடும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்ணாடிப்பட்டு சந்தை புதுக்குப்பத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், அரசு அமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
