புதுச்சேரி காவல்துறை பணியாளர்கள் மற்றும் அமைச்சக ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய உத்தரவு

மோட்டார் வாகனங்கள் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என புதுச்சேரி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் நோக்கில், புதுச்சேரி காவல் துறையின் அனைத்து காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சரவைப் பணியாளர்களும், சீருடையில் இருந்தாலும் சாதாரண உடையில் இருந்தாலும், பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசு வாகனமாக இருந்தாலும் தனிப்பட்ட வாகனமாக இருந்தாலும், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், துறைசார் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்பார்வை அதிகாரிகள் இந்த உத்தரவை தங்கள் கீழ் பணிபுரியும் காவல் பணியாளர்களுக்கு தெரியப்படுத்தி, கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு புதுச்சேரி காவல் துறை தலைமைக் காவலக பொது இயக்குநர் அலுவலகத்தின் சிறப்பு அலுவலர், அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பதிவு அறை உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி காவல் தலைமையக காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) ஆர். மோகன் குமார் இந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
