ஆரோவில் பாரத் நிவாஸில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழா
ஆரோவில்லில் அமைந்துள்ள பாரத் நிவாஸ் வளாகத்தில், “வளர்ந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்” என்ற தலைப்பில் பொதுஉறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற கருத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.
விழாவில் அமைச்சர்கள் ஆ. நமச்சிவாயம், ராஜவேலு, காமராஜர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பாஜக மாநிலத் தலைவர் வி.பி. இராமலிங்கம், ஆரோவில் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் என்பதால், அவர்களைப் போதைப்பொருள், மது உள்ளிட்ட தீய பழக்கங்களிலிருந்து காக்கக் குடும்பம், பள்ளி, சமூகம் ஆகியவை இணைந்து பொறுப்பேற்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.
நிகழ்வின்போது பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி வழியாக நாடு முழுவதும் உள்ள மக்களுடன் உரையாடினார். வளர்ந்த இந்தியாவை உருவாக்கப் போதைப்பொருள் இல்லாத சமுதாயம் அவசியம் என்றும், ஒவ்வொரு இளைஞரும் தமது வாழ்க்கையில் போதைப்பொருளுக்கு இடமளிக்காமல் பிறரையும் அதிலிருந்து தடுக்க முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
பிரதமரின் உரையைத் தொடர்ந்து, பாரத் நிவாஸ் வளாகத்தில் கூடியிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், நாடு முழுவதும் உள்ளவர்களுடன் இணைந்து “போதைப்பொருள் இல்லாத இந்தியா” உருவாக்கும் நோக்கில் பொதுஉறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
விழாவை முன்னிட்டு வளாகத்தில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களையும் பொதுமக்களையும் கவர்ந்தன.