புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ரவி பிரகாசுக்கு வேளாண்மை, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் பொறுப்பு: அரசு உத்தரவு

புதுச்சேரி, செப். 3:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக (CEO) பணியாற்றி வரும் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு, கூடுதலாக வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் அரசுச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணை (G.O.Ms.No.78)-ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2011-ஆம் ஆண்டு ஏஜிஎம்யூடி (AGMUT) பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கூடுதலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் அரசுச் செயலாளராகப் பொறுப்பு வகிப்பார் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (DRDA) தலைவராகவும் ரவி பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறையான ஒப்புதலைப் பெற்று இந்த கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலாளர் முனைவர் சரத் சவுகான் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


