இலாஹி நகரில் ரூ.55 லட்சத்தில் சிமெண்ட் சாலை: பணிகளை ஆய்வு செய்தார் எம்.எல்.ஏ. நாஜிம்
காரைக்கால் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலாஹி நகர் (சேமியா குளம்) பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதி இல்லாததாலும், மழைக்காலங்களில் சேற்றுச் சாலையாக மாறி மக்களுக்குப் பெரும் அசௌகரியம் ஏற்பட்டதாலும், புதிய சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.
இப்பணிகளை புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் நேரில் சென்று ஆய்வு செய்தார். சாலையின் அகலம், நீளம், நீர் தேங்காமல் செல்ல வடிகால் வசதி, தரமான சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து, மக்கள் பயணத்திற்குத் தடையின்றி பாதுகாப்பான சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதுபோன்ற அடிப்படை வசதிகள் மூலம் இலாஹி நகர் மற்றும் சேமியா குளம் பகுதி மக்களின் வாழ்வுத் தரத்தை உயர்த்துவதே தனது நோக்கம் என நாஜிம் தெரிவித்தார்.


