தமிழ்நாடு

“காவிரி உரிமை பற்றிப் பேசாதவர்கள் துரோகிகள்”: திமுக எம்.பி. தயாநிதி மாறன்

காவிரி உரிமை விவகாரத்தில் மௌனம் காக்கும் அரசியல் தலைவர்களை விமர்சித்து, “தமிழகத்தின் காவிரி உரிமை பற்றிப் பேசாதவர்கள் துரோகிகள்” என திமுக எம்.பி. தயாநிதி மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காவிரி நீர்ப் பகிர்வு, மேகேதாட்டு அணைத் திட்டம், நீட் தேர்வு ரத்துக் கோரிக்கை உள்ளிட்ட தமிழ்நாட்டுக்கு முக்கியமான விஷயங்களில், மாநிலத்திற்கு வருகை தரும் தேசியத் தலைவர்கள் வெளிப்படையாகக் குரல் கொடுக்காமல் இருப்பது மாநில மக்களின் நலனுக்கு நேரடித் துரோகம் என்று சென்னை மத்தியத் தொகுதி எம்.பி.யான அவர் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டின் காவிரி உரிமை, டெல்டா விவசாயிகளின் உயிர்நாடி. இதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசாமல் இங்கு அரசியல் சொற்பொழிவு நடத்துபவர்கள் தமிழ்நாட்டின் பக்கத்தில் இல்லை; அவர்களது மௌனம் துரோகமாகவே பார்க்கப்பட வேண்டும்” என அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளை மட்டும் பேசிவிட்டு, நீட் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கையை வெளிப்படையாக ஆதரிக்காமல் இருப்பதையும் அவர் “இன்னொரு துரோகம்” எனச் சாடியுள்ளார்.

காவிரி, மேகேதாட்டு, நீட் உள்ளிட்ட விஷயங்களில் தெளிவான அரசியல் நிலைப்பாடு எடுக்காமல் தமிழ்நாட்டின் உணர்வுகளையும் உரிமைகளையும் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *