சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் ‘மோடி சகஸ்ர நாட்டியாஞ்சலி’: 1,218 குழந்தைகள் பங்கேற்று அசத்தல்!

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவிலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால மக்கள் சேவையை முன்னிட்டு ‘மோடி சகஸ்ர நாட்டியாஞ்சலி’ மற்றும் அகண்ட மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாண்புமிகு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு தில்லை நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 1,218 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து பரதநாட்டியம் ஆடி இறைவனுக்கு அர்ப்பணித்தனர். நமது பாரம்பரியக் கலை மற்றும் ஆன்மிகப் பண்பாட்டின் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு காண்போரைக் கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் சன்னதி பிரகாரத்தில் அகண்ட மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாஜக ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் வினோத் ராகவேந்திரா, நாட்டியக் கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி, கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் தமிழ் அழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



