அரவிந்தர் கண் மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு விழா: பன்னாட்டு மனித உரிமைகள் பேரவைக்கு விருது வழங்கி கௌரவிப்பு!
புதுச்சேரி, செப். 4:
புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனையில் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவை முன்னிட்டு, 2025-26 ஆம் ஆண்டிற்கான கண்தான விழிப்புணர்வு மற்றும் விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கண்தானப் பணிகளில் சிறந்து விளங்கிய அரசு மருத்துவத் துறையினர் மற்றும் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (NGO) பிரிவில், புதுச்சேரி மாநில அளவில் முதலிடத்தையும், தமிழக அளவில் 2-வது இடத்தையும் பிடித்து அதிகளவில் கண்களை தானமாகப் பெற்றுத் தந்த ‘பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை’ அமைப்புக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இவ்விருதினை புதுச்சேரி மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்தன் அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் வழங்கினார். இதனை பன்னாட்டு மனித உரிமைகள் பேரவையின் தலைவர் சக்திவேல் தலைமையில் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் நேரில் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பன்னாட்டு மனித உரிமைகள் பேரவையின் கண்தானம், உடல்தானம், ரத்ததானம் மற்றும் உறுப்பு தானப் பிரிவு ஆலோசகர் கந்தன் மற்றும் எத்தியன் போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
